என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம்- பெட்ரோல் ஊற்றி முதியவர் தீக்குளித்து தற்கொலை

    ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த முதியவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு அண்ணாமலை வீதி, மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 50).

    இந்நிலையில் வாசுதேவன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அந்த ஏலச்சீட்டில் பலர் இணைந்து பணம் கட்டி வந்தனர்.

    இந்நிலையில் இதில் சிலர் பணம் கட்டாமல் வாசுதேவனை ஏமாற்றி வந்தனர். சுமார் ரூ.7 லட்சம் வரை பணம் கட்டாமல் இருந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் வாசுதேவன் பணம் கேட்டுள்ளார். அவர்கள் இன்று தருவதாகவும், நாளை தருவதாகவும் கூறி காலம் தாழ்த்தி வந்தனர்.

    இதனால் கடந்த சில நாட்களாக வாசுதேவன் மனவேதைனயில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென வீட்டைவிட்டு வெளியே கிளம்பி பெரியார் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கி அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாசுதேவனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வாசுதேவன் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×