என் மலர்
உள்ளூர் செய்திகள்

மல்லிகை
பூக்கள் வரத்து குறைவு-விலையும் வீழ்ச்சி
தஞ்சையில் பூக்கள் வரத்து குறைந்து விலையும் குறைந்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு மதுரை,
நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்
இருந்து விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்படும். இதேபோல்
இங்கு இருந்து வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பப்படும்.
முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்கள், விசேஷ நாட்களில்
பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும். மற்ற நாட்களில்
பூக்களின் விலை இயல்பான அளவில் இருக்கும். இது தவிர வரத்து
குறைவாக இருந்தாலும் பூக்களின் விலை அதிகரிக்கும்.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 12-ம் தேதியில் இருந்து
15-ந் தேதி வரை பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்தது. இந்த
நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பூக்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
இன்று சந்தைக்கு பூக்களின் வரத்து வழக்கத்தை விட குறைவாக
இருந்தது. இருப்பினும் தேவை குறைவாக இருந்ததால்
பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதில் மல்லிகை
பூ வரத்து இல்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.2000-க்கு விற்ற முல்லைப்
பூ இன்று பல மடங்கு குறைந்து ரூ.400-க்கு விற்பனையானது.
இதேபோல் ஜாதிப்பூ கிலோ ரூ.300-க்கும், அரளி ரூ.150, ஆப்பிள் ரோஸ்
ரூ.120, கனகாம்பரம் ரூ.1000, சந்தனமுல்லை ரூ.1500-க்கும் விற்கப்பட்டது.
இந்த பூக்களின் விலையும் கடந்த நாட்களை ஒப்பிடும் போது
குறைவாகும்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது,
நேற்று முழு ஊரடங்கால் இன்று பூக்களின் வரத்து குறைவாக
இருந்தது. இருந்தாலும் அவற்றின் விலையும் குறைவுதான். மல்லிகைப்பூ மதியம் வரை வரவில்லை. மாலையில் வரும் என எதிர்பார்க்கிறோம்.
நாளையிலிருந்து பூக்களின் வரத்து வழக்கமான அளவில்
வர வாய்ப்பு உள்ளது என்றனர்.
Next Story