search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    பொங்கல் முடிந்து திரும்புபவர்களால் கொரோனா சற்று அதிகரிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அரசை பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவியது. தினசரி பாதிப்பு சென்னையில் 8 ஆயிரம் என்ற அளவுக்கு எகிறியது. நேற்று குறைந்துள்ளது.

    பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஏராளமானோர் திரும்பி கொண்டிருக்கிறார்கள். இந்த ஒன்று கூடுதலால் அடுத்த ஒரிரு நாட்கள் தொற்று சற்று அதிகரிக்கலாம்.

    இருப்பினும் கொரோனா தொற்று விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். தொற்று எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருப்பது ஆறுதலானது.

    அரசை பொறுத்தவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறோம். ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 2700, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2050, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 1600, படுக்கைகளும் நந்தம்பாக்கம் கொரோனா சிறப்பு மையத்தில் 950, ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், கேளம்பாக்கம், தாம்பரம் சித்த மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் தலா 100 படுக்கைகளும் தயாராக உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இதில் 8 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன.

    ஆனாலும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வது கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள், இரு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளுங்கள்.

    கொரோனா தடுப்பூசி

    60 வயதை கடந்தவர்களில் 90 லட்சம் பேர் இன்னும் 2-வது தவணை ஊசி போட்டுக்கொள்ளவில்லை. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைவரும் தடுப்பூசியை விரைவாக போட்டுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×