search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளம் உடைந்து வெளியில் வந்த மீன்களை சிறுவர்கள் பிடித்த காட்சி.
    X
    குளம் உடைந்து வெளியில் வந்த மீன்களை சிறுவர்கள் பிடித்த காட்சி.

    போடியில் பலத்த மழை- குளம் உடைந்து தண்ணீருடன் வீடுகளுக்குள் புகுந்த மீன்கள்

    போடியில் 2 மணிநேரம் பெய்த பலத்தமழை காரணமாக குளம் உடைந்து மீன்கள் வீடுகளுக்குள் புகுந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் கடந்த ஒரு மாதமாகவே குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 2 மணிநேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. போடி பெருமாள் கோவில் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து வீதிகளில் ஓடியது. பலத்த மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கொட்டக்குடி ஆற்றில் அணைப்பிள்ளையார் கோவில் தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்தது.

    பலத்த மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து ராஜவாய்க்கால் வழியாக பங்காருசாமி குளத்திற்கு தண்ணீர் வந்தது. இந்த குளத்தில் ஒரு பகுதியில் குப்பைகள் சேர்ந்திருந்ததால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை இருந்தது.

    இதனால் குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள சர்ச்தெரு குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் சென்றது. தண்ணீருடன் மீன்களும் மிதந்து வந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீன்களைப்பிடித்து சேகரித்தனர். மேலும் போடி 7வது வார்டு வ.உ.சி.நகர் பகுதியிலும் சாக்கடை நீருடன் கழிவு நீர் சூழ்ந்தது. மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் இப்பகுதியில் இதே போன்று தண்ணீர் தேங்குவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து சீரமைப்பு செய்தனர். தொடர்ந்து இன்று காலையிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    Next Story
    ×