search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரி பஸ் நிலையம் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்
    X
    வடசேரி பஸ் நிலையம் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்

    குமரியில் இன்று முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடியது: கடைகள் அடைப்பு

    வடசேரி சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இரு சக்கர வாகனங்களில் வந்த வர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். நான்கு சக்கரங்களிலும் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையடுத்து சாலைகள் வெறிச்சோடியது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவிலில் அசம்பூ ரோடு, கேப்ரோடு உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. நாகர்கோவில், கோட்டார், வடசேரி, பார்வதிபுரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

    சவேரியார் கோவில் சந்திப்பு, வடசேரி சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இரு சக்கர வாகனங்களில் வந்த வர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். நான்கு சக்கரங்களிலும் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். நாகர்கோவிலில் ஒரு சில மருந்தகங்கள் மட்டும் திறந்து இருந்தது. பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில உணவகங்களில் திறந்து பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்க்குகளும் திறந்திருந்தன.

    மார்த்தாண்டம், குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, தக்கலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இன்றைய பொழுதை குடும்பத்தினருடன் அவர்கள் கழித்தனர். கன்னியாகுமரி காந்தி மண்டபம் காமராஜர் மண்டபம் முன்பு உள்ள சாலைகள் வெறிச்சோடியது. கன்னியாகுமரிக்கு, சபரி மலைக்கு சென்று விட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினார்கள்.

    முழு ஊடங்கு காரணமாக இன்று பஸ்கள் ஓடவில்லை. இதனால் மாவட்டத்திலுள்ள டெப்போக்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ்கள் இயக்கப்படாததால் வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ்நிலையம் கன்னியாகுமரி பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    சென்னை, கோவை போன்ற நகரங்களில் இருந்து புறப்பட்ட ரெயில்கள் இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள் பஸ் வசதி இல்லாமல் கடும் அவதிக்கு ஆளா னார்கள். அவர்கள் உறவி னர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் வீடுகளுக்குத் திரும்பி சென்றனர். ஒரு சில பயணிகள் ஆட்டோக்களிலும் வீடுகளுக்கு சென்றனர்.

    குமரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யை மேற்கொண்டனர். ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், களியக்காவிளை, சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டனர் அவர்கள் சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை மேற் கொண்டனர்.

    வெளியிலிருந்து வந்த வாகனங்கள் எதுவும் இன்று குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. உரிய ஆவணங்கள் வைத்திருந்த வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர் மற்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள். மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    Next Story
    ×