என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்திரமாக தரை இறங்கிய ஹெலிகாப்டர்
    X
    பத்திரமாக தரை இறங்கிய ஹெலிகாப்டர்

    கடம்பூர் மலைப்பாதையில் பத்திரமாக தரை இறங்கிய ஹெலிகாப்டர்

    வானில் பறந்து கொண்டு இருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே இறங்கியதால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் ஹெலிகாப்டர் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்து பார்வையிட்டனர்.
    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் பாரத். இவரது மனைவி ஷீலா. ஐ.டி. கம்பெனி ஊழியர்கள். இவர்கள் 2 பேரும் கேரள மாநிலம் கொச்சினில் ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்தனர்.

    இதற்காக பாரத், ஷீலா ஆகியோர் தனியார் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் இருந்து கொச்சின் நோக்கி புறப்பட்டனர். ஹெலிகாப்டரை கேப்டன்கள் ஜஸ்பால், அங்கித் சிங் ஆகியோர் இயக்கி வந்தனர்.

    இந்த ஹெலிகாப்டர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர்புதூர் என்ற பகுதியில் இன்று காலை 11.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டு இருந்தது.

    அப்போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் செல்ல முடியவில்லை. இதையடுத்து பைலட்கள் பத்திரமாக அத்தியூர்புதூர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே தரை இறக்கினர்.

    வானில் பறந்து கொண்டு இருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே இறங்கியதால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் ஹெலிகாப்டர் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் ஹெலிகாப்டரை ஓட்டி வந்த பைலட்கள் இது குறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ஹெலிகாப்டரை ஓட்டி வந்த பைலட்களிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் அவர்களை ஒரு இடத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். பனி மூட்டம் விலகியதும் மீண்டும் அவர்கள் புறப்பட்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    சரியான நேரத்தில் பைலட்டுகள் ஹெலி காப்டரை பத்திரமாக தரை இறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    Next Story
    ×