
வேலூர்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்திவருகின்றனர்.இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி கிருஷ்டியான்பேட்டை சோதனை சாவடியில் போதை பொருள் நுண்ணறிவு குற்ற புலனாய்வு துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, மற்றும் போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சித்தூரில் இருந்து வேலூர் வந்த தனியார் பஸ்சில் சோதனை நடத்தினர். 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
அதில் 10 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. உடனடியாக அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கினர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திராளி கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (வயது50) என்பது தெரியவந்தது.
இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனக்கா பள்ளியிலிருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு திருமங்கலத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது. சீதாராமனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.