search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

    கோவையில் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற அப்துல் ரகுமான் (வயது 55). கூலித் தொழிலாளி.

    மது பழக்கத்துக்கு அடிமையான இவர் தினசரி குடித்துக்கொண்டே இருந்தார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்துல் ரகுமானை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இனிமேல் மது குடிக்க கூடாது என கூறினர். இதனால் கடந்த சில நாட்களாக அப்துல் ரகுமான் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட அப்துல் ரகுமானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணபதி அருகே உள்ள சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சரவணன் (48). வேலைக்கு செல்லும் இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சரவணன் வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×