search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்

    இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1½ கோடி கஞ்சா பறிமுதல்

    நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1½ கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க தனிப்படை போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று அதிகாலை நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள ஒரு பைபர் படகில் இருந்தவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பைபர் படகில் சோதனை செய்தனர். அப்போது அந்த பைபர் படகில் மீன்பிடி வலைகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது..

    கடலுக்கு மீன்பிடிக்க செல்வதுபோல பைபர் படகில் கஞ்சாவை பதுக்கி வைத்து அதனை இலங்கைக்கு கடத்த தயாராக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 10 மூட்டைகளில் இருந்த 280 கிலோ கஞ்சா, மீன்பிடி வலைகள், கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற 4 மோட்டார் சைக்கிள்கள், பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை நாகை சுங்கத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எங்கிருந்து கஞ்சா கடத்தி நாகைக்கு கொண்டு வரப்படுகிறது?, இதில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×