search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- அதிகாரிகள் தகவல்

    நீலகிரி குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் என்பதால் 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 12 பள்ளிகள் தடுப்பூசி போடும் மையங்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் நீலகிரிக்கு 5,500 கோவிஷூல்டு தடுப்பூசி வந்தது. பின்னர் மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

    நேற்று அனைத்து மையங்களிலும் பொதுமக்களுக்கு 2-வது டோஸ் போடப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணி 90 சதவீதம் முடிந்து உள்ளது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 349 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில், இதுவரை ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    அதேபோல் வியாபாரிகள், டிரைவர்கள், ஓட்டல் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நீலகிரி குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் என்பதால் 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து தடுப்பூசி ஒதுக்கப்படும் அளவை பொறுத்து முன்னுரிமை படி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. முதல் டோஸ் 2 லட்சத்து 24 ஆயிரத்து 927 பேருக்கும், 2-வது டோஸ் 55 ஆயிரத்து 366 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

    மொத்தம் 18 வயதுக்கு மேல் 5.80 லட்சம் பேர் உள்ளனர். தற்போது வரை 2.80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்னும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டி இருக்கிறது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×