என் மலர்
செய்திகள்

கடம்பூர் வனப்பகுதியில் சூறாவளி காற்றில் 700 செவ்வாழைகள் சேதம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல தயக்கம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் நேற்று பலத்த இடி மின்னல் இருந்தது. மேகம் கறுத்து காணப்பட்டது. ஆனால் சிறிய தூரல் மட்டுமே பெய்தது.
சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. சத்தி அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடம்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ளனர். மேலும் மஞ்சள், மரவள்ளி உள்பட பல்வேறு பயிரிட்டு வருகிறார்கள்.
கடம்பூர் இருட்டிபாளையம் பகுதியில் கீதா என்ற விவசாயி 1 ஏக்கர் நிலத்தில் செவ்வாழைகள் பயிட்டிருந்தார். அந்த பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 700 செவ்வாழைகள் சூறாவளி காற்றின் வேகத்தால் முறிந்து விழுந்தன. ஒரு செவ்வாழை தார் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதில் 700 வாழைகள் சேதமானது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி சீனவாசன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி ஆய்வு செய்தார். அப்போது சேதமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என உறுதி கூறினார்.
இதேபோல் பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, அம்மாபேட்டை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பவானி, காளிங்கராயன் பாளையம், சித்தார், அம்மாபேட்டை, சித்தோடு, நசியனூர் உள்பட பல பகுதியில் இரவு 9 மணி அளவில் இடி- மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை தூறி கொண்டே இருந்தது. கவுந்தப்பாடி, எலந்தகுட்டை மேடு, சலங்கபாளையம் பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று இரவு 9 மணிக்கு பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சில இடங்களில் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு அந்தியூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது, அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே வெண்ணிலா கட் என்ற இடத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

டிரான்ஸ் பார்மர் வெடித்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பொதுமக்கள் கூடினர். டிரான்ஸ் பாரத்தில் இருந்து ஆயில் சிதறியது. அந்த ஆயில் அக்கம் பக்கம் உள்ள வீடுகளின் மேற்பகுதியிலும் உள்புறமும் தெறித்தது.
அப்போது சத்தத்தை கேட்டு வெளியே வந்த அப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், டிரான்ஸ்பார்மரில் இருந்து அவரது வீட்டில் சிதறிய ஆயிலில் கால் வைத்தார். அப்போது அவர் வழுக்கி கீழே விழுந்து காயமடைந்தார்.
மேலும், டிரான்ஸ் பார்மர் வெடித்ததால் நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது.
இது குறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பவானி- 12 மி.மீ.
கவுந்தப்பாடி- 29.4 மி.மீ.
எலந்தகுட்டை மேடு- 5.4 மி.மீ,
அம்மாபேட்டை 8.4 மி.மீ.
மொத்தம்- 55.2 மி.மீ.






