search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    செந்துறை அருகே விவசாயியை வெட்டிய ரவுடி அடித்துக்கொலை- 3 பேரை கைது

    செந்துறை அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 44). அந்த பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    பல முறை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு செல்வதும், பின்னர் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதையும் கொளஞ்சி வழக்கமாக கொண்டிருந்தார்.

    அத்துடன் போலீசாருக்கு பயந்து இரவு நேரங்களில் அடர்ந்த முந்திரி காடுகளில் தூங்குவது வழக்கம். அதே போல் இவர் புதுப்பாளையத்தில் இருந்து இடையக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள முந்திரி தோட்டத்தில் மது போதையில் அங்கே இருந்த கட்டிலில் படுத்து தூங்கி உள்ளார்.

    வழக்கமாக முந்திரி தோப்பிற்கு காவலுக்கு அதே பகுதியை சேர்ந்த தர்ம ராஜ் (36) என்பவர் சென்று உள்ளார். அப்போது தனது கட்டிலில் மர்ம நபர் தூங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரை எழுந்து செல்லுமாறு கூறினார். ஆனால் குடிபோதையில் இருந்த கொளஞ்சி எழுந்து செல்ல மறுத்து தகராறு செய்து உள்ளார்.

    அதனைத் தொடர்ந்து தர்மராஜ் தனது உறவினர்களை அழைத்து உள்ளார். அங்கே லோகேஸ்வரன் (26) பிரபாகரன் (30) சக்திவேல் (22) ஆகிய 3 பேர் வந்து உள்ளனர். இதனைக் கண்ட கொளஞ்சி அங்கிருந்து தப்பிச்சென்று முந்திரி மரத்தில் மறைந்தார்.

    அவரை 4 பேரும் தேடி சென்று பிடித்து தாக்க தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி தான் வைத்து இருந்த அரிவாளால் தர்மராஜை வெட்டி உள்ளார். இதனைக்கண்ட உறவினர்கள் கொளஞ்சியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் கொளஞ்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்மராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் விரைந்து வந்து லோகேஸ்வரன் (26) பிரபாகரன் (30) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் ஆகியோர் கைதானவர்களிடம் விசாரணை நடத்தினர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×