என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
அந்தியூர் அருகே கொரோனாவுக்கு முதியவர் பலி
அந்தியூர் அருகே கொரோனாவுக்கு முதியவர் பலி ஆனார். மேலும் 3 பெண் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள 65 வயது முதியவர் ஒருவருக்கு தொடர்ந்து சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நலம் குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முதியவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் முதியவர் வசித்த வந்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதேபோல் அந்தியூர் பகுதியில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 62 வயது உடைய ஆண் மற்றும் 55 வயது, 73 வயது மற்றும் 27 வயது உடைய 3 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததை சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அந்த 4 பேரும் வசித்த பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Next Story






