search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    துடியலூர் அருகே நகைக்காக மூதாட்டியை கொன்றவர்கள் யார்?- போலீசார் விசாரணை

    துடியலூர் அருகே மூதாட்டியை கொலை செய்தவர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை அடுத்த துடியலூர் பன்னிமடை கடைவீதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி(வயது70). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் இங்கு முத்துலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் இளைஞர்கள் சில வாடகைக்கு தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முத்துலட்சுமிக்கு போன் செய்தார். ஆனால் நீண்ட நேரமாக போன் செய்தும் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து செய்த போது சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது தாய் வீட்டிற்கு வந்தார். அங்கு வீட்டின் முன்புற கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

    இதையடுத்து தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்து அவரை வரவழைத்தார். பின்னர் அவர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டிற்குள் முத்துலட்சுமி கட்டிலில் பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து மகன்கள், மகள் கதறி அழுதனர்.

    தகவல் அறிந்த துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துலட்சுமியின் உடலை பார்த்தார். அப்போது அவர் கழுத்தில் இருந்த தங்க நகைகள், மூக்குத்தி, கம்மல் போன்றவை மாயமாகி இருந்தன. இவர் தனியாக இருப்பதை அறிந்த மர்மநபர்கள் இரவில் வீட்டிற்குள் புகுந்து முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மூதாட்டியை கொலை செய்தவர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் தங்கியிருந்த இளைஞர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சம்பவம் நிகழ்ந்த போது யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பன்னிடையில் இருந்து தடாகம் செல்லும் சாலை, கணுவாய் சாலை, வீட்டின் அருகே கோவிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×