
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் குருவையா (வயது 66). தொழிலாளியான இவர் தி.மு.க.வின் தீவிர விசுவாசி ஆவார். நேற்று காலை குருவையா இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
அப்போது சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என கூறிக்கொண்டே இருந்த அவர் திடீரென தனது கை விரலை துண்டித்துக் கொண்டார்.
உடனே அங்கு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.