search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குன்றத்தூர் அருகே வியாபாரி வெட்டிக்கொலை- 5 பேர் கைது

    குன்றத்தூர் அருகே வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:  

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் ஜெகன்நாத சாமி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 63). அதே பகுதியில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு அங்கேயே பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    நேற்றுமுன்தினம் இரவு கடையில் இருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் கடைக்குள் அமர்ந்து இருந்த செல்வராஜை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். செல்வராஜ் எவ்வளவோ போராடி உள்ளார். இருப்பினும் மர்ம நபர்கள் விடாமல் கடைக்குள் இருந்து அவரை வெளியே இழுத்துபோட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி்ச் சென்று விட்டனர். அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெட்டுபட்டு கிடந்த செல்வராஜை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ், போரூர் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விரைந்து வந்து செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோனி சகாய பாரத், விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் கடையின் அருகில் உள்ள டீக்கடையில் 3 பேர் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில் செல்வராஜை அந்த நபர்கள் தாக்கி உள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில் 18 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் காரணமாக கொலை நடந்ததா? என விசாரணை செய்தபோது அந்த நபர்கள் இல்லை என்பது தெரியவந்தது.

    செல்வராஜ் குடும்பத்தினரிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தவர் ஈசாக் என்ற சூர்யா. தற்போது அங்கு வேலையில் இருந்து நின்று விட்டார். கார் டிரைவராக அடிக்கடி வெளியூர் சென்று விடும் ஈசாக்கை செல்வராஜ் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈசாக் தனது நண்பர்களான பிரகாஷ், சச்சின், அஜித், சசிகுமார் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    5 பேரையும் திருவண்ணாமலையில் மடக்கி பிடித்த தனிப்படை போலீசார் அவர்களை சென்னை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னை அழைத்து வந்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×