என் மலர்
செய்திகள்

சரவணன்
பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்
காட்டுமன்னார்கோவிலில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 21). இவர், வீரானந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவில் அண்ணாநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தனியாக சென்ற ஒரு பெண்ணிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே சரவணன், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். அவரை பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
பின்னர் இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரவணனை மீட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






