search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறப்பு வாகன சோதனை: போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

    வேலூரில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.
    வேலூர்:

    வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், வெங்கட்ராகவன், கருணாநிதி ஆகியோர் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனை கடந்த 12-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது. சோதனையின் போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கிறார்களா?, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?, டிரைவர் சீருடை அணிந்து உள்ளாரா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா?, சீட் பெல்ட் அணிந்து உள்ளார்களா? போன்ற போக்குவரத்து சாலை விதிகள் கடைபிடிக்கப்படுகின்றதா என ஆய்வு செய்தனர். மேலும் கார்களில் பம்பர் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.

    இந்த சோதனையின் முடிவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 40-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 8 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×