search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யா
    X
    சத்யா

    திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொன்றேன் - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

    புவனகிரியில் அழுகிய நிலையில் பெண் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொன்றதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் மாடிப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த பெண், புதுச்சேரி மாநிலம் திருபுவனையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சத்யா(வயது 37) வயது என்பது தெரியவந்தது.

    மேலும் நிதி நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை சோதனை செய்தபோது, அதில் கடந்த 29-ந்தேதி இரவு 7 மணியளவில் புவனகிரியில் தனியார் கணினி மையத்தில் பணிபுரியும் புவனகிரி அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசன் மகன் முரசொலி மாறன்(வயது 29) என்பவர் சத்யாவை மாடிக்கு அழைத்து சென்றதும், இரவு 10 மணியளவில் முரசொலிமாறன் மட்டும் தனியாக கீழே இறங்கி வந்ததும் தெரிந்தது. இதனால் அவரை முரசொலி மாறன் கற்பழித்து கொன்று இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முரசொலிமாறனை போலீசார் தேடினர். இதையறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து முரசொலி மாறனை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முரசொலி மாறனை தேடி வந்தனர். இந்த நிலையில் முரசொலி மாறன் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவினாசி விரைந்தனர். இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்த முரசொலி மாறன் தனது காதில் விஷத்தை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அதற்குள் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் முரசொலிமாறன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், சத்யாவும் புதுச்சேரி திருபுவனை பகுதியில் உள்ள நூல் நிறுவனத்தில் வேலைபார்த்தோம். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். இந்த நிலையில் எனக்கு புவனகிரியில் வேலை கிடைக்க நான் அங்கிருந்து வந்துவிட்டேன். இருப்பினும் எங்களது பழக்கம் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி சத்யா, என்னை பார்ப்பதற்காக புவனகிரிக்கு வந்தார். பின்னர் நான் சத்யாவை தனியார் நிதிநிறுவனத்தின் மாடிக்கு அழைத்து சென்றேன். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தோம்.

    அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதனால் அவர் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், சத்யாவின் கழுத்தை நெரித்துக்கொன்றேன். பின்னர் அங்கிருந்து நான் தப்பி ஓடிவிட்டேன். இருப்பினும் போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு முரசொலி மாறன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து முரசொலிமாறனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×