என் மலர்
செய்திகள்

கொரோனா தடுப்பூசி
புதுச்சேரியில் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை
புதுச்சேரி மாநிலத்தில் இன்று 9 மையங்களில் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
புதுச்சேரி:
கொரோனா உயிர்க்கொல்லி நோய் சீனாவின் மத்திய நகரமான ஊகான் நகரில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவியது. இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் உருமாறி இங்கிலாந்து நாட்டில் பரவி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 38 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 37 ஆயிரத்து 165 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 633 உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் மட்டும் 30 ஆயிரத்து 488 பேரும், காரைக்காலில் 3 ஆயிரத்து 790 பேரும், ஏனாமில் 2 ஆயிரத்து 102 பேரும், மாகியில் ஆயிரத்து 784 பேரும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 68 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 32 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் மத்திய அரசின் உத்தரவின்படி நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது.
இதற்காக புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரி, தட்டாஞ்சாவடி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரி, கோரிமேடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஆகிய 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு நலவழி மையம் ஆகிய 3 இடங்களிலும், ஏனாம் அரசு ஆஸ்பத்திரி, மாகி அரசு ஆஸ்பத்திரி என மாநிலம் முழுவதும் மொத்தம் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
Next Story






