search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியபோது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியபோது எடுத்த படம்.

    நீலகிரியில் 35 கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்- கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உறுதி

    நீலகிரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகளுக்கு 14-வது நிதிக்குழு நிதி ஒதுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உறுதி அளித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.. இங்கு 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு முடியும் நிலையிலும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் 14-வது நிதிக்குழு நிதி ஊராட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வில்லை. இதுகுறித்து கிராம ஊராட்சி தலைவர்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

    அதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஊட்டி எச்.ஏ.டி.பி. அரங்கில் கிராம ஊராட்சி தலைவர்களுடன் அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசும்போது, நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டும் அதிகாரிகளே உள்ளாட்சிகளை கவனித்து வருகின்றனர். ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரங்கள் ஓராண்டாகியும் வழங்கப்பட வில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பஞ்சாயத் ராஜ் சட்டத்தின்படி அனைத்து அதிகாரங்களும் வழங்க வேண்டும். வளர்ச்சி பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கலெக்டரிடம் முறையிட்டனர்.

    பின்னர் கலெக்டர் பேசும்போது, கலெக்டர் கிராம ஊராட்சி தலைவர்களின் அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுடன், 14-வது நிதிக்குழு நிதி ஊராட்சிகளுக்கு ஒதுக்க ஆவன செய்யப்படும் என்றார்.

    இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    Next Story
    ×