search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    நாகர்கோவில் இருளப்பபுரத்தில் தொழிலாளி எரித்துக்கொலை

    நாகர்கோவில் இருளப்பபுரத்தில் தொழிலாளி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரம் மீன் சந்தை அருகே காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாலையிலேயே காய்கறி வியாபாரிகள் வந்து வியாபாரத்தை தொடங்குவார்கள்.

    வழக்கம் போல் இன்று காலையும் வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு வந்தனர். அப்போது மார்க்கெட்டில் செயல்படும் கடைகளின் பின்புறத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு உடல் கருகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவரின் கழுத்தில் இருந்து இடுப்பு பகுதி வரை தீயில் எரிந்திருந்தது. முகம் மற்றும் கால் பகுதிகள் எரியாமல் இருந்தது.

    இதனால் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொன்று உடலை எரித்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன்(வயது59) என்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவரது உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சந்திரனை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இத னால் அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் பிரிந்து சென்று விட்டனர். ஆகவே சந்திரன் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் அவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    அவர் பிணமாக கிடந்ததை இன்று அதிகாலை மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள் தான் முதலில் பார்த்துள்ளனர். இதனால் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சந்திரன் பிணமாக கிடந்த பகுதியில் மார்க்கெட் மட்டுமின்றி ஏராளமான கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும் அதற்கு எதிர்புறத்தில் மதுக்கடை ஒன்றும் உள்ளது. அது மட்டுமின்றி என்.ஜி.ஓ.காலனி, மணிகட்டி பொட்டல், சங்கு துறை பீச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக இருளப்பபுரம் மார்க்கெட் செயல்படும் பகுதி இருக்கிறது.

    இதனால் காலை முதல் இரவு வரை இந்த பகுதி வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும். ஆகவே நள்ளிரவு நேரத்திலேயே சந்திரன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

    சந்திரன் குறித்து விசாரித்த போது அவர் கூலி வேலை பார்த்து வந்ததும், பல நாட்கள் இரவு நேரத்தில் இருளப்பபுரம் பிரதான சாலையில் சுற்றித்திரிவார் என்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அவ்வாறு செல்லும் போது யாருடனாவது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை யாரேனும் திட்டமிட்டு கொலை செய்தனரா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சந்திரன் கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இருக்கின்றன. அதில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் 3 மர்ம நபர்கள் அந்த பகுதியில் நடமாடுவது பதிவாகி இருந்தது.

    அந்த நபர்களுக்கு சந்திரனின் கொலைக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே அந்த நபர்கள் யார்? என்று கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இருளப்பபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×