என் மலர்
செய்திகள்

பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்.
ஒடுகத்தூர் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்- அழகான ஆண் குழந்தை பிறந்தது
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
அணைக்கட்டு:
ஒடுகத்தூரை அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவரின் மனைவி சங்கீதா (வயது 25). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் திடீரெனப் பிரசவவலி ஏற்பட்டது. அவரை, ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் விரைந்து வந்து கீழ்கொத்தூரில் இருந்து சங்கீதாவை ஏற்றி கொண்டு ஒடுகத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக செல்வி உடன் சென்றார். சங்கீதாவுக்கு பிரசவவலி அதிகமானதால் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. மருத்துவ உதவியாளர் செல்வி, சங்கீதாவுக்கு பிரசவம் பார்த்தார். நள்ளிரவு 12.50 மணியளவில் ஓடும் ஆம்புலன்சிலேயே சங்கீதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து தாயும், சேயும் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, இருவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story






