search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 அடியை எட்டியுள்ள நிலையில் மேட்டூர் அணையின் அழகிய தோற்றத்தை படத்தில் காணலாம்.
    X
    100 அடியை எட்டியுள்ள நிலையில் மேட்டூர் அணையின் அழகிய தோற்றத்தை படத்தில் காணலாம்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக 100 அடியை எட்டியது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த 10-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    11-ந் தேதி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாகவும், 12-ந் தேதி வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகமானது. நேற்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 27 ஆயிரத்து 212 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 14 ஆயிரத்து 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 99.11 அடியாகவும், நேற்று காலை 99.90 அடியாகவும் இருந்தது. பின்னர் மதியம் 12.30 அளவில் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இந்த ஆண்டில் 2-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த மாதம் 25-ந் தேதி மதியம் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் முதல் முறையாக 100 அடியை எட்டியது. அப்போது அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்த நீர்வரத்து மறுநாளே குறைய தொடங்கியது. அதாவது கடந்த மாதம் 26-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் நீர்வரத்து மளமளவென்று குறைந்து கொண்டே வந்தது. அணைக்கு நீர் வரத்தை விட அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வந்தது. இவ்வாறு குறைந்து வந்த அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கி நேற்று மதியம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×