search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா நதி நீர்
    X
    கிருஷ்ணா நதி நீர்

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு மார்ச் மாதம் வரை தண்ணீர் திறப்பு

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் வரை முழு அளவிலான தண்ணீரை திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகரின் குடிநீர் வினியோகத்தை அதிகரிக்க, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையில் உள்ள பூண்டி ஏரிக்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறப்பதற்காக தெலுங்கு கங்கா கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது.

    கிருஷ்ணா நதிநீர் திட்டம் என்றும் அழைக்கப்படும் இந்த திட்டம் கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக 52.94 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னை மாநகரின் குடிநீர் தேவை எளிதில் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஆந்திர மாநில தெலுங்கு கங்கை திட்ட பொறியாளர்கள் கூறியதாவது:-

    நடப்பு ஆண்டு முழு அளவிலான கிருஷ்ணா நீரை தமிழகம் பெறும் என்று எதிர்பார்க்கலாம். காரணம் கண்டலேறு அணையின் சேமிப்பு வரும் வாரங்களில் மேலும் உயர்ந்து அதன் முழு கொள்ளளவு 68.05 டி.எம்.சி.யை எட்டக்கூடும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. கண்டலேறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 60 டி.எம்.சி. தண்ணீர் இருக்கும் வகையில் அணை பராமரிக்கப்பட உள்ளது. சுமார் 8 டி.எம்.சி. தண்ணீரை திருப்பதி மற்றும் சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரிக்கு திறந்துவிட முடிவு செய்து உள்ளோம். கண்டலேறு அணையின் முழு கொள்ளளவு 68.05 டி.எம்.சி. ஆகும். கடந்த 2010-ம் ஆண்டு 50.65 டி.எம்.சி. என்ற அளவில் தண்ணீர் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டது.

    வருகிற நவம்பர் மாதம் விவசாயப்பணிகள் தொடங்கியதும், தண்ணீர் ஆவியாவது, இழப்பு, விவசாயப்பணிகளுக்கு தேவை போன்ற பல்வேறு காரணங்களை ஆய்வு செய்து, கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு தற்போது திறக்கப்படும் தண்ணீரின் அளவு 800 கன அடியில் இருந்து 600 கன அடியாக குறைக்கப்படும்.

    தற்போதைய நிலையை பொறுத்தவரை 2021-ம் ஆண்டு மார்ச் வரை பூண்டிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோம். இதன் மூலம் இந்த ஆண்டுக்கான முழு அளவு தண்ணீரும் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளன.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×