search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போலி இணைய தள முகவரி மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.4 லட்சத்தை இழந்த பேராசிரியர்

    போலி இணையதள முகவரி மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.4 லட்சத்தை இழந்த பேராசிரியர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் வசிப்பவர் பழனிச்சாமி. அவருடைய மகன் அன்பரசன் (வயது 34). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது வர்த்தகத்தின் மூலம் இவரது வங்கி கணக்கில் 4 நாட்களில் மளமளவென ரூ.80 லட்சம் வரை உயர்ந்துள்ளது. உடனே அன்பரசன் அந்தப் பணத்தை எடுப்பதற்காக ஆன்லைன் பரிவர்த்தனை செய்துள்ளார். ஆனால் அந்தப் பணம் பரிவர்த்தனை ஆகாததால் வர்த்தக நிறுவனத்தை தொடர்பு கொண்டு செல்போனில் பேசியுள்ளார்.

    அதற்கு செல்போனின் மறுமுனையில் இருந்து ஒருவர் பேசியுள்ளார். அவர் அன்பரசனிடம், ‘இந்த பணத்தை நீங்கள் பெற வேண்டுமானால் நாங்கள் கொடுத்துள்ள வங்கிக் கணக்கில் ரூ.4 லட்சம் செலுத்திய பின்னரே எடுக்க முடியும்’ என தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அவர், வெளிநாட்டு வர்த்தகம் என்ற இணையதள முகவரி வாயிலாக “ஸ்பே டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் புதுடெல்லி“ கணக்கு எண் 38 62 0 3 12254 என்ற வங்கி கணக்கிற்கு ரூ.4 லட்சம் செலுத்தியுள்ளார்.

    அதன்பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.80 லட்சமும் படிப்படியாக குறையத் தொடங்கியது. அப்போது தான் அன்பரசன், போலி இணையதள முகவரி மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்தை இழந்தது தெரிய வந்தது.

    உடனே இதுபற்றி அவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அந்தப்புகாரில் அவர், ‘போலியான இணையதள முகவரியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். அவரது புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×