search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பவானி அருகே விபத்தில் சத்துணவு ஊழியர் பலி

    பவானி அருகே விபத்தில் சத்துணவு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    பவானி:

    சித்தோடு அருகே உள்ள பேரோடு குட்ட தயிர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். அவருடைய மனைவி சிவகாமி (வயது 47). இவர் நசியனூர் அருகே ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

    சதாசிவம் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் நோய் குணமாக வேண்டி சிவகாமி தினமும் மாலை நேரங்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினம் மாலை சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சதாசிவம் மழை பெய்வதால் வர தாமதம் ஆகும் என நினைத்து மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டார்.

    ஆனால் மறுநாள் காலை ஆகியும் சிவகாமி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சதாசிவம் மனைவியை தேடிச்சென்று பார்த்தார். அப்போது சிவகாமி அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே பிணமாக கிடந்தார். உடனே இதுபற்றி சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவகாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘நடந்து சென்ற சிவகாமி மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்’ என்பது தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×