search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் மற்றொரு தி.மு.க. பிரமுகர் கைது

    நெல்லை அருகே கோஷ்டி மோதலில் தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் முத்துராமன் (வயது35). இவர் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் குடும்பத்துடன் வடக்கு வள்ளியூரில் குடியிருந்து வந்தார்.

    நேற்று இரவு இவர் வள்ளியூருக்கு வந்த தனது உறவினரை காரில் ஏற்றி தெற்கு வள்ளியூருக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்களை தெற்கு வள்ளியூரில் இறக்கி விட்டு விட்டு, முத்துராமன் காரில் வீடு திரும்பினார்.

    அப்போது ஊருக்கு வெளிப்புறம் உள்ள சாலையில் ஒரு மண்எண்ணை பேரலை போட்டு கார் செல்ல முடியாதபடி தடுத்து வைத்து இருந்தனர். இதனால் முத்துராமன் காரை விட்டு இறங்கி பேரலை தள்ளி வைத்தார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த கும்பல் முத்துராமனை சுற்றி வளைத்து அரிவாளால் முத்துராமனை சரமாரி வெட்டி விட்டு, தப்பி ஓடிவிட்டது. அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள், முத்துராமனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதில் கொலைக்கான காரணம் குறித்து ‘திடுக்’ தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட முத்துராமன் மற்றும் தெற்கு வள்ளியூரை சேர்ந்த மற்றொரு முத்துராமன் (30) ஆகிய 2 பேரும் தி.மு.க. கட்சியில் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.

    இதில் யார் பெரியவர் என்று அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. ஊரில் உள்ள கோவில் விழா கொண்டாடுவதிலும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    இதனால் தான் கொலை செய்யப்பட்ட முத்துராமன், தெற்கு வள்ளியூரை காலி செய்து விட்டு குடும்பத்துடன் வடக்கு வள்ளியூருக்கு சென்று விட்டார்.

    நேற்று இரவு கொலை செய்யப்பட்ட முத்துராமன், உறவினரை காரில் ஏற்றிக்கொண்டு தெற்கு வள்ளியூருக்கு வந்துள்ளனர். அப்போது சாலை அருகே மற்றொரு முத்துராமனும், அவரது ஆதரவாளர்களும் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர். அவர்கள் அருகில் கார் சென்ற போது, சத்தமாக ‘ஹாரன்’ ஒலித்தபடி சென்றுள்ளார்.

    காரில் முத்துராமன் இருப்பதை பார்த்த மற்றொரு முத்துராமனும் அவரது ஆதரவாளர்களும் ஆத்திரம் அடைந்தனர்.

    இதனால் அவர்கள், எப்படியும் முத்துராமன் இந்த வழியாக தானே திரும்பி வரவேண்டும் என்று, சாலையின் குறுக்கே பேரலை போட்டு மறித்து வைத்து இருந்தனர்.

    அவர்கள் எதிர்பார்த்த படியே முத்துராமன் சிறிது நேரத்தில் காரில் திரும்பி வந்தார். அப்போது ரோட்டில் பேரலை போட்டு மறித்து வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துராமன், பாதை ஏற்படுத்துவதற்காக, காரில் இருந்து இறங்கி, பேரலை தள்ளி வைக்க முயன்றார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த மற்றொரு முத்துராமனும் அவரது ஆதரவாளர்களும் அவரை சுற்றி வளைத்து அவதூறாக பேசி வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மற்றொரு முத்துராமனையும் அவரது ஆதரவாளர்களையும் தேடி வந்தனர். இன்று வெளியூருக்கு தப்பி ஓட முயன்ற முத்துராமனை போலீசார் கைது செய்தனர். அவரது ஆதரவாளர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    கட்சி கோஷ்டி மோதலில் கொலை நடந்து இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×