search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிங்கம்புணரி அருகே முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் கைது

    சிங்கம்புணரி அருகே முகமூடி கொள்ளையர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாருதிப்பட்டியில் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி விமானப்படை முன்னாள் வீரர் நாகசுந்தரம் வீட்டுக்குள் 6 பேர் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் கத்தி முனையில் வீட்டில் இருந்த ரூ. 80 ஆயிரம் மற்றும் 16 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் மருதிப்பட்டி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான 5 சிறப்பு படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மதுரை மாவட்டம் முத்துச்சாமிபட்டி பிரிவு சாலையில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு சென்ற வாகன சோதனையில் எஸ்.வி.மங்கலம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர்.

    இதையடுத்து அவர்களை எஸ். வி.மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் கரடிப்பட்டி மொட்டைக்கோபுரம் ராஜா (வயது24), முத்து ராமு (21), திருவாடானை ஓரியூர் பிரித்திவிராஜ் (22), கோட்டை ராஜா (25), வெள்ளையாபுரம் பாலகுமார் (23), இளம்பரிதி (22) என்பதும், இவர்கள் 6 பேரும் முகமூடி அணிந்து விமானப்படை முன்னாள் வீரர் வீட்டில் கொள்ளை அடித்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மற்றும் 16 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×