என் மலர்
செய்திகள்

கரூர் அருகே கிரானைட் வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி- 7 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர்:
மதுரை மாவட்டம் மேலமடை கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், கிரானைட் வியாபாரி. இவர் தன் தொழிலை கரூர் மாவட்டத்தில் விரிவுபடுத்த நிலம் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது கரூர் மாவட்டம் அந்தரப்பட்டியைச் சேர்ந்த பரசுராமன் மற்றும் அவரது உறவினர்கள், புரோக்கர்கள் உள்ளிட்ட 7 பேர் கோபால கிருஷ்ணனை அணுகி அந்த ரப்பட்டியில் உள்ள 19.89 ஏக்கர் நிலத்தை காட்டியுள்ளனர்.
இந்த நிலத்தை வாங்கிக் கொள்வதாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி கோபாலகிருஷ்ணன் வாய்மொழியாக உத்தரவாதம் அளித்து ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.
அதன் பிறகு கோபால கிருஷ்ணன் தனது நிறுவன மேலாளரை அனுப்பி அரசு ஆவணங்களில் நிலத்தின் விவரங்கள் குறித்து ஆராய்ந்த போது அவற்றில் சில பகுதிகளில் அரசு திட்ட தண்ணீர் குழாய்கள் செல்லும் வழி என்பதும், கிரானைட் தொழில் தொடங்குவதற்கு ஏற்றதல்ல எனவும் தெரிய வந்தது.
மேலும், அரசு திட்ட தண்ணீர் குழாய்கள் செல்வதை மறைத்து, ஆவணங்களில் மோசடி செய்து ரூ.25 லட்சம் ஏமாற்றியது தெரிய வந்தது.
பரசுராமன் உள்ளிட்டவர்களிடம் மேலாளர் ரூ.25 லட்சத்தை திரும்பக் கேட்ட போது பரசுராமன் உள்பட பேரும், அவரை மிரட்டியுள்ளனர். இது குறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் பரசுராமன், அவர் மனைவி ராஜலட்சுமி. சிந்தையூர் கிருஷ்ணமூர்த்தி, பரசுராமனின் மைத்துனர் ராஜா, புரோக்கர்கள் சக்தி, ஜெகதீஷ், பிரகாஷ் ஆகிய 7 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.