என் மலர்
செய்திகள்

மது விற்ற கடைகளை பெண்கள் முற்றுகை
பவானி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற கடைகளை முற்றுகையிட்ட பெண்கள்
பவானி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற கடைகளை பெண்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி:
பவானியை அடுத்த வரதநல்லூர் ஊராட்சியில் உள்ள சில கடைகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் ஒன்று திரண்டு திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்த கடைகளுக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த கடைகளை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளை பெண்கள் முற்றுகையிட்டதும், அதன் உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ‘சமீப காலமாக வரதநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சில கடைகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் ஆண்கள் வருமானம் குறைந்த நிலையிலும் மது குடிப்பதற்காக அதிக அளவில் செலவும் செய்கிறார்கள்.
இதனால் நாங்கள் குடும்பம் நடத்த முடியாமல் போதிய வருமானமின்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க உள்ளோம்,’ என்றனர்.
இந்த சம்பவத்தால் வரதநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






