என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    நீலகிரி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று- கலெக்டர் தகவல்

    நீலகிரி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லநள்ளியில் தனியார் ஊசி தொழிற்சாலை உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதால், குறைந்த ஊழியர்களை கொண்டு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதற்கிடையில் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், கோவைக்கு சென்றுவிட்டு மீண்டும் தொழிற்சாலைக்கு வந்தார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்பட நீலகிரியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தொற்றை பரப்பும் வகையில் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 12 ஆயிரத்து 500 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்கு அரசு பஸ்களில் அதிகமானோர் வருகின்றனர். இதனால் மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது நீலகிரியை சேர்ந்த 30 பேர், கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது.
    Next Story
    ×