என் மலர்
செய்திகள்

கொரோனா பரவுவதை தடுக்க 38 ஆயிரம் டாக்டர்களுக்கு ஆலோசனை
ஈரோடு:
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவி வருவதால், அதைத்தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள 38 ஆயிரம் டாக்டர்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை தென்பட்டால், உடனடியாக தனியார் அல்லது அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கொரோனா வைரசை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இல்லை என்றாலும், தொடக்க கட்டத்தில் குணப்படுத்தும் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு இடங்களில் தனி வார்டுகள் தயாராக உள்ளன.
நோய் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும். இருமல், தும்மல் வரும்போது முகத்தை கைக்குட்டையால் மூடி கொள்ள வேண்டும். முககவசம் அணிந்து கொள்வதும் சிறந்தது. அதிக மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கலாம். அசைவ உணவுகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.
கொரோனா வைரஸ் பற்றி பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்பி பீதி அடைய வேண்டாம். வைரஸ் பரவுவதை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த நேரமும் உதவி செய்ய அரசும், இந்திய மருத்துவ சங்க டாக்டர்களும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






