search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்கா
    X
    ஊட்டி தாவரவியல் பூங்கா

    கொரோனா வைரஸ் எதிரொலி: ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது

    கொரோனா வைரஸ் காரணமாக குளிர் பிரதேசமான ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். இங்கு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

    ஆண்டு தோறும் ஏப்ரல்- மே மாதத்தில் ஊட்டியில் கோடை சீசனையொட்டி கண்காட்சி நடைபெறும்.

    இதனை காண்பதற்காக வெளி மாவட்டங்களான சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பல வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக காரில் வந்து செல்கின்றனர்.

    இதனால் அந்த காலகட்டத்தில் ஊட்டியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும். இதன் காரணமாக வியாபாரிகள், ஓட்டல் வைத்திருப்பவர்கள், விடுதி வைத்திருப்பவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

    இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த கொரோனா வைரஸ் காரணமாக குளிர் பிரதேசமான ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது.

    இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு காரணமாக நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்ட மலை ரெயிலில் வெறும் 7 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வரத்து குறைவால் அதனை நம்பி வியாபாரம் செய்து வரும் வியாபரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

    Next Story
    ×