search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தப்பி ஓடிய பாபு.
    X
    தப்பி ஓடிய பாபு.

    ஆதம்பாக்கத்தில் 11 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை- வாலிபர் தப்பி ஓட்டம்

    ஆதம்பாக்கத்தில் இன்று மதியம் 11 வயது சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வாலிபர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 10-வது தெருவில் வசித்து வருபவர் வேதவல்லி. வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் பாபு, மாதவன். இவர்களில் பாபுவுக்கு திருமணமாகி ஈக்காட்டுதாங்கலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    வேதவல்லியின் தம்பியும் அவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்களது மகள் சோபனாவை வேதவல்லி தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது சோபனாவுக்கு 11 வயது ஆகிறது.

    அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் வேதவல்லிக்கு உதவியாக இருந்தார். அவர் மீது வேதவல்லி அதிக பாசத்துடன் இருந்தார். இது வேதவல்லியின் மகன் பாபுவுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக அவர் தாய் வேதவல்லியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டில் சோபனா மட்டும் தனியாக இருந்தார். அப்போது பாபு அங்கு வந்தார். அவர் சோபனாவிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் தான் வைத்திருந்த கத்தியால் சோபனாவின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக வெட்டினார். மேலும் கழுத்தை அறுத்தார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சோபனா சரிந்தார். உடனே பாபு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் வேதவல்லி வீட்டிற்கு வந்தபோது, சோபனா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் வேதவல்லி, அவரது மகன் மாதவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய பாபுவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×