search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    காட்பாடியில் வியாபாரியிடம் ரூ.5 லட்சம் பறித்த கொள்ளையர்கள்

    காட்பாடியில் வியாபாரியிடம் ரூ.5 லட்சம் பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி தாராபடவேடு இளங்கோ வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது40). காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    சுரேஷ்குமார் நேற்று இரவு 10.30 மணியளவில் கடையை அடைத்தார். கடையில் இருந்த வியாபார பணம் ரூ.5 லட்சத்தை ஒரு துணிப்பையில் போட்டு கையில் வைத்துக் கொண்டு சில அடி தூரம் நடந்து சென்றார்.

    அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சுரேஷ்குமார் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். சுரேஷ்குமார் பணப்பையை விடாமல் பிடித்துக்கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார். கொள்ளையர்கள் சுரேஷ்குமாரை கீழே தள்ளிவிட்டு பணப்பையுடன் தப்பி சென்றனர். இதனால் பதறிய சுரேஷ்குமார் கத்தி கூச்சலிட்டபடி கொள்ளையர்களை விரட்டி சென்றார். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சுரேஷ்குமார் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    வியாபாரியிடம் 5 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே காட்பாடி பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 5 லட்சம் வழிப்பறி சம்பவம் பொதுமக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×