என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே நிதி நிறுவன காவலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி - வாலிபர் கைது
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொண்டல் செட்டி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவர் சீர்காழி கச்சேரி சாலை திருமஞ்சன வீதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரிடம் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். உடனே அவர் கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் மர்ம நபர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை போலீசார் ஆய்வு செய்த போது அது சீர்காழி தென்பாதி திட்டைசாலையை சேர்ந்த விக்னேஷ்(19) என்ற வாலிபரின் மோட்டார் சைக்கிள் எண் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவிச்சந்திரனிடம் கத்தியை காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து விக்னேசை கைது செய்த போலீசார் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரது நண்பர்கள் 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.






