search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை

    மயிலாடுதுறை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மாப்படுகை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் நாகராஜ் (வயது 48). இவர் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார்கள் செல்வம், ராஜா ஆகியோரிடம் சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் தினமும் வேலை முடிந்து இரவு மது அருந்துவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாப்படுகை பகுதியில் உள்ள பிச்சுமணி என்பவரது வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்ட 3 பேரும் இரவு வேலை பார்த்தனர். பின்னர் வேலை முடிந்து மது பாட்டில்களை வாங்கி கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது போதை தலைக்கேறிய 3 பேரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் நாகராஜ் கொத்தனார்கள் செல்வம், ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் நாகராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து கொலையை மறைப்பதற்காக மாப்படுகை ரெயில்வே கேட்பகுதி தண்டவாளத்தில் நாகராஜின் உடலை அவர் தற்கொலை செய்வது போல் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு அந்த ரெயில்வே தண்டவாளம் வழியாக வந்த கம்பன் விரைவு ரெயிலின் ஓட்டுனர் தண்டவாளத்தில் ஒருவர் படுத்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ரெயிலை அவசர அவசரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது ஏற்கனவே கொலை செய்துவிட்டு உடலை தண்டவாளத்தில் போட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மயிலாடு துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஒரு மணிநேரம் ரெயில் தாமதமானது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை தண்டவாளத்தில் இருந்து மீட்டனர். அதன்பின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது செல்வம், ராஜா என தெரியவந்தது.

    இதுகுறித்து மயிலாடு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம்,ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட நாகராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×