என் மலர்
செய்திகள்

அமமுக மாநில அமைப்பு செயலாளர் ஞானசேகரன் தி.மு.க.வில் இணைந்தார்
வேலூர்:
டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி பாராளுமன்ற தேர்தலில் மிக குறைவான வாக்குகள் மட்டுமே வாங்கியது. இதையடுத்து அந்த கட்சியின் நிர்வாகிகள் அ.தி.மு.க.விலும், தி.மு.க.விலும் ஐக்கியமாகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன்பே தி.மு.க.வில் சேர்ந்தார். தங்க தமிழ்செல்வன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.
அ.ம.மு.க.வில் இருந்த வேலூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் தி.மு.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில வேலூர் தொகுதியில் 4 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஞானசேகரன், மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று தி.மு.க.வில் சேர்ந்தார்.
ஞானசேகரன் 1991 முதல் 2011 வரை தொடர்ந்து 20 ஆண்டுகள் அதாவது 4 தடவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஜி.கே.வாசன் ஆதரவாளராக இருந்த அவர் ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியதும் த.மா.கா.வில் சேர்ந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனையடுத்து ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு தினகரன் தனிக்கட்சி தொடங்கியதும் அவரது கட்சியான அ.ம.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் சேர்ந்துள்ளார்.

டி.டி.வி. தினகரன் கட்சி தொடங்கிய போது முன்னாள் எம்.பி., சி.கோபால் அவரது மகன் என்.ஜி.பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்பிரமணி, ஜெயந்தி பத்மநாபன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவசங்கரன், எல்.கே.எம்.பி. வாசு, நீலகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், கலையரசு, பாண்டுரங்கன் மற்றும் அப்புபால் பாலாஜி, என பெரிய நிர்வாகிகள் பட்டாளமே கட்சியில் இருந்தனர்.
தற்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், நீலகண்டன் ஆகியோர் தி.மு.க.விலும், சிவசங்கரன் அ.தி.மு.க.விலும் சேர்ந்துள்ளனர். வேலூர் மாநகரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அதிகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.






