search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குத்தாலம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை

    குத்தாலம் அருகே குடும்ப பிரச்சினையால் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குத்தாலம்: 

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே வானாதிராஜபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. 1½ வயதில் தனஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த புருஷோத்தமன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அபிராமி, தனது மாமியார், மாமனாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக அபிராமியிடம் அவரது மாமியார் மற்றும் அருகில் உள்ள உறவினர்கள் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அபிராமி நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். முன்னதாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) தனது மகள் தனஸ்ரீக்கு கொடுத்துள்ளார். உடனே குழந்தை வாந்தி எடுத்துள்ளது.

    இதுகுறித்து குடும்பத்தினர் கேட்டபோது, குழந்தைக்கு விஷம் கொடுத்ததை தெரிவித்தார். உடனே குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் குழந்தையை தூக்கி கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அங்கு தனஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் வீட்டில் இருந்த அபிராமி தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தை தனஸ்ரீயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அபிராமி வரவில்லையே என்று அவரது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அபிராமி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அபிராமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக அபிராமியின் தாய் நிர்மலா(45) கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அபிராமிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணி விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×