search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர்கள் விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால் சஸ்பெண்டு - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
    X

    ஆசிரியர்கள் விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால் சஸ்பெண்டு - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

    விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவும் பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் அளிக்கின்றனர்.

    விடைத்தாள்களை திருத்தம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசு தேர்வுத் துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினாலும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்து விடைத்தாள் நகல்களை பெற்று பார்த்த போதுதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வருகின்றன.

    ஆசிரியர்கள் அலட்சியமாக விடைத்தாள்களை திருத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அறிந்தும் இது போன்ற தவறுகள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றன.

    மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு 4,500 பேர் விண்ணப்பித்து விடைத்தாளின் நகலை பார்த்தபோது அதில் 1700 மாணவர்களின் மதிப்பெண்கள் வேறுபட்டு இருந்தது.

    மாணவர்களின் விடைத்தாள்களில் கூட்டல் தவறு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மதிப்பெண்களை கூட்டி மொத்தமாக போடும் போது தவறு செய்திருப்பது தெரிய வந்தது.

    10 மதிப்பெண்கள் வரை வேறுபட்டு இருந்தது. மேலும் சிலரது மதிப்பெண்கள் 72 என்பதற்கு பதிலாக 27 என தவறுதலாக கொடுக்கப்பட்டு இருந்தன. விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் திருத்தினாலும் அது சரியாக திருத்தப்பட்டு இருக்கிறதா? கூட்டலில் தவறு உள்ளதா? என்பதை கண்காணிக்க படிப்படியாக 3 கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.

    விடைத்தாள் திருத்தும் பணியில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். அப்படியிருந்தும் மதிப்பெண் தவறாக வழங்கியது, முறையாக கூட்டி மதிப்பெண் அளிக்காமல் அலட்சிய போக்கில் செயல்படுதல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்டத்திலும் விடைத்தாள் திருத்தம் செய்ததில் குளறுபடிகள் செய்ததாக 500 ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இதனை அனுப்பி உள்ளனர்.

    விடைத்தாள்களில் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டி மதிப்பெண் மாறுபட்டு இருப்பதையும் கூறி 7 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    முறையான விளக்கத்தை கொடுத்தால் அவர்கள் மீது 17-ஏ, 17 பி போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அதன்படி அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை 3 ஆண்டுகளுக்கு ‘கட்’ செய்யப்படும்.

    உரிய விளக்கம் தராதவர்கள் அல்லது விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    விடைத்தாள் திருத்தம் செய்வதில் கவனத்துடன் செயல்படவும் தவறுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது என தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் ஆசிரியர்கள் சிலர் தவறு செய்கின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த போதிலும் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற பிழைகள் வருகிறது.



    தற்போது அலட்சிய போக்கில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர்களது விளக்கத்தை பொறுத்து ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் சஸ்பெண்டு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×