search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணி-பெரியபாளையத்தில் குடிநீர் பஞ்சம்: பெண்கள் காலி குடங்களுடன் மறியல்
    X

    திருத்தணி-பெரியபாளையத்தில் குடிநீர் பஞ்சம்: பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

    திருத்தணி - நல்லாத்தூர் சாலையில் இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பள்ளிப்பட்டு:

    பருவமழை கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது.

    ஏரி-குளங்களில் நீர் மட்டம் குறைந்ததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பல்வேறு இடங்களில் பொது மக்கள் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருத்தணி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    திருத்தணியை அடுத்த கோதண்டராமபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை குடிநீர் கேட்டு திருத்தணி - நல்லாத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    கனகம்மாசத்திரம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சியில் மேட்டுக்காலனி, முஸ்லிம் நகர், புதிய காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை பெரியபாளையம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேட்டு காலனி பகுதியில் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×