search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மே 23-ந்தேதிக்கு பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரஜினி- சத்யநாராயண ராவ் தகவல்

    மே 23-ந்தேதிக்கு பிறகு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள மணிகண்டத்தில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளனர். 48 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த மணிமண்டபத்தில் மண்டல பூஜை நடத்தப்பட்டு இன்று 48-வது நாளில் மண்டல அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த விழாவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். இதில் சன்னியாசிகள், சாதுக்களும் கலந்து கொண்டனர்.

    அங்கு பத்திரிக்கையாளர்களிடம் சத்யநாராயண ராவ் கூறியதாவது:-

    எங்களது பெற்றோருக்கு ரஜினி ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளது மகிழ்ச்சி. அதற்கு 48 நாட்கள் மண்டல பூஜை இன்று அபிஷேகம் நடத்தி செய்கிறார்கள். இதில் சாதுக்கள், சன்னியாசிகள், பொதுமக்கள், பக்தர்கள், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் வருவார். அவர் தற்போது மிகவும் பிசியாக உள்ளார். ஆனால் இங்கு நடக்கும் நிகழ்வை அடிக்கடி போனில் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக் கொண்டும் உள்ளார்.

    இங்கு நடைபெறும் இந்த மண்டல பூஜை விழாவில் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நலமாக இருக்கவும் மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் பூஜைகள் செய்யப்பட்டன.



    தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை எப்போது அறிவிப்பார் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மே 23-ந்தேதிக்கு பிறகு அவர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார்.

    ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவர் தாமதம் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். தாமதம் செய்வது நல்லதுக்காகதான். அவர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார். மணிமண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினிகாந்த் மே 23-ந்தேதிக்கு பிறகு அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படும் நிலையில் திருச்சியில் மாநாடு நடத்தி அதை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. திருச்சி அருகே கட்டப்பட்டுள்ள அவரது பெற்றோர் மணி மண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருகை தர உள்ளதாக அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கூறியது இதையொட்டி தான் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
    Next Story
    ×