search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலை இழுத்துசென்ற விவசாயி கதி என்ன? தீயணைப்பு படையினர் 2-வது நாளாக தேடுதல் வேட்டை
    X

    முதலை இழுத்துசென்ற விவசாயி கதி என்ன? தீயணைப்பு படையினர் 2-வது நாளாக தேடுதல் வேட்டை

    சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்தபோது முதலை இழுத்துச் சென்ற விவசாயியை தீயணைப்பு படையினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் அடிக்கடி கரைக்கு வருவது வழக்கம். ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்கள் பலர் கரைக்கு வரும் முதலைகளை பார்த்து அச்சம் அடைந்து வந்தனர். இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஆற்றில் குளிக்க சென்ற விவசாயி ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 45), விவசாயி. நேற்று அவர் தனது மனைவி முத்து லட்சுமியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். கணவனும், மனைவியும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஜெயமணியின் காலை திடீரென்று ஒரு முதலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனே ஜெயமணி கூச்சல் போட்டார். அங்கு குளித்து கொண்டிருந்த முத்துலட்சுமியும் தனது கணவரை முதலை தண்ணீருக்குள் இழுத்து செல்வதை பார்த்து அவரும் கூச்சலிட்டார்.

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி ஜெயமணியை தேடினர். ஆனால் அவர்களால் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர்கள் இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் அங்கு விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் இறங்கி ஜெயமணியை இரவு 7 மணிவரை தேடினர். வெகுநேரம் தேடியும் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்பு அவர்கள் கரை திரும்பினர்.

    2-வது நாளாக இன்று காலை தீயணைப்பு படையினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடி வருகிறார்கள். முதலை இழுத்து சென்ற விவசாயி ஜெயமணியின் கதி என்ன என்று தெரிய வில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

    ஆற்றில் குளித்த விவசாயியை முதலை இழுத்து சென்ற சம்பவம் பெராம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×