search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை
    X

    கொடைக்கானலில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை

    கொடைக்கானலில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையினால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. #Rain

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 1 வாரமாக மாலை நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. தொடர் விடுமுறையால் கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே பல இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

    நேற்று மாலை 6 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரலுடன் மழை பெய்யத் தொடங்கியது. அதன் பிறகு பலத்த மழையாக மாறி இன்று காலை 6 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரங்களில் மின் தடையும் அடிக்கடி ஏற்பட்டது.

    கொடைக்கானலில் கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்திலேயே கோடையின் தாக்கம் அதிகமாக நிலவி வந்தது. நாட்கள் செல்ல செல்ல வெப்பம் அதிகரித்ததால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வந்தது.

    ஆனால் கொடைக்கானலில் தற்போது பெய்து வரும் மழையினால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோடையில் ஏற்பட இருந்த தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான ஆபத்தும் நீங்கியுள்ளது.

    வெள்ளி நீர் வீழ்ச்சி, பியர் சோழா, பாம்பார் நீர் வீழ்ச்சி போன்ற பல்வேறு அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைச்சாலையில் ஆங்காங்கே புதிய அருவிகளும் தோன்றி வருகின்றன. இதனால் கொடைக்கானல் நகர மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கீழானவயல் உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கேரட், உருளைக்கிழங்கு ஆகிய விதைப்புகளை தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கீழ்மலை பகுதிகளிலும் நேற்று 2 மணி நேரம் நல்ல மழை பெய்தது.

    இதே போல திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பரவலாக நேற்று மழை பெய்தது. திண்டுக்கல்லில் இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கிய உடன் மின்தடை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை நிலவியதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய தொடங்கிய போது சூறாவளி காற்று வீசியதால் மழை தடைபட்டது.

    மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த மழையினால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது. மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குடிநீருக்கு சிக்கல் இருக்காது என மக்கள் நம்புகின்றனர். #Rain

    Next Story
    ×