search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமிரபரணி ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் தம்பதி- போலீஸ் விசாரணையில் தகவல்
    X

    தாமிரபரணி ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் தம்பதி- போலீஸ் விசாரணையில் தகவல்

    ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் தம்பதி என்றும், குடும்ப பிரச்சினையில் அவர்கள் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உமரிக்காடு மெயின் ரோட்டில் அரசு சிமெண்ட் குடோன் உள்ளது. இதன் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சீமை கருவேல மரங்கள் நிறைந்த காட்டு பகுதி உள்ளது.

    இங்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் நேற்று காலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் 2 பேரும் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தனர். அவர்கள் இறந்து ஒரு வாரத்துக்கு மேலானதால் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர்களின் உடல்களை காட்டு விலங்குகள் தின்றதால் உருக்குலைந்த நிலையில் இருந்தன.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாய ஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த ஆண் வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். இறந்த பெண் சேலை, சட்டை அணிந்து இருந்தார்.

    அவர்களது செருப்புகள், தண்ணீர் பாட்டில் அருகில் தனியாக கிடந்தன. எனவே அவர்கள் கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என்று போலீசார் கருதி விசாரணை நடத்தினர். இறந்த ஆண், பெண் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ஆண், பெண் யார்?, அவர்கள் எப்படி இறந்தனர்?, தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(65), அவரது மனைவி பாலாமணி(58) என்பது தெரியவந்தது.

    சிவசுப்பிரமணியன் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் வரன் பார்த்தும் திருமணம் தள்ளிப்போனதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மனவேதனையில் இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினையும் இருந்து வந்தது.

    இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் ஏரல் பகுதிக்கு வந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×