search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்
    X

    நாமக்கல் அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்

    நாமக்கல் அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 16).

    இவர் நாமக்கல் கோட்டை அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடந்த பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

    நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு மணிகண்டன் வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனைஉறவினர்கள் வீடுகள், நண்பர்கள் வீடுகளில் மணிகண்டனை தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லை.

    தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவர் மணிகண்டன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதனால் சோகத்தில் மூழ்கிய ராஜ்குமார்- செந்தாமரை மற்றும் உறவினர்கள், மணிகண்டனின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர்.

    அதில், அவரது பெயர் மற்றும் முகவரி, செல்போன் எண், புகைப்படத்தை அனைவருக்கும் பகிரவும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவியது.

    இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் மாயமான மணிகண்டன் இன்று காலை பிணமாக மிதந்தார்.

    இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்லிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று கிணற்றில் இருந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், மணிகண்டன் பிணமாக கிடந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது. பொதுமக்கள் யாரும் இந்த கிணற்றை பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் குளிக்க சென்றாரா? அப்போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×