என் மலர்
செய்திகள்

நாகையில் காரில் கடத்தி வரப்பட்ட 600 மதுபாட்டில்கள் பறிமுதல்- வாலிபர் கைது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் மது கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாகை வெளிப்பாளையம் கூக்ஸ் சாலை பகுதியில் நேற்று தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் காரில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபிஸ் சாலை பகுதியை சேர்ந்த தென்னரசு மகன் பிரபாகரன் (வயது28) என்பது தெரியவந்தது. இது குறித்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். காரில் இருந்த 600 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.






