search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அறிவிப்பு
    X

    புதுவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அறிவிப்பு

    புதுவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளார். #ADMK #MLA

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் எங்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். எங்களின் நண்பரும் ஆவார். அவரது சமீபத்திய செயல்பாடுகள் சபாநாயகருக்குரிய நடுநிலையை தவறுகிறாரோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். முதல்- அமைச்சர் நாராயணசாமி நடத்திய தர்ணா போராட்டத்திலும் பங்கேற்றார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக தனக்கு புகார் வந்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

    இந்த ஆட்சி அமைந்த காலம் முதல் 3 பேர் கட்சி மாறுகின்றனர், 2 பேர் கட்சி மாறுகின்றனர் என்ற தகவல் வந்துகொண்டேதான் இருந்தது. தகுதியற்றவர்களை எம்.எல்.ஏ. ஆக்கியதால் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள நிலை இது.

    அ.தி.மு.க.வை பொறுத்த வரை குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர ஒருபோதும் விரும்பமாட்டோம். ஆட்சி கவிழ்க்கும் நிகழ்ச்சிக்கு துணைபோக மாட்டோம். எங்கள் கட்சி எம்.எல்ஏ பேரம் பேசினார் என கூறும் புகார்கள் பொய்யானது.

    ஆதாரமற்ற இந்த புகாரை வைத்துக்கொண்டு எங்களை மிரட்ட முடியாது. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. புதுவையில் புதிதாக குரோத, விரோத அரசியலை புகுத்த வேண்டாம். அப்படி புகுத்தினால் அதை விதைத்தவர்களே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

    ஒருபோதும் முதல்- அமைச்சர் பயப்பட தேவையில்லை. அவர் ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். எங்களுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை புதுவை மக்கள் அளித்துள்ளனர்.

    நாங்கள் எதிர்க்கட்சியாக சரியாக செயல்பட்டு வருகிறோம். அரசியல் கண்ணோட்டத்தோடு சபாநாயகர் வைத்திலிங்கம் செயல்பட்டால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்.

    காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தறிகெட்டு நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதை கைவிடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MLA

    Next Story
    ×