search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி லாட்ஜில் காதலியுடன் தங்கிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    வேளாங்கண்ணி லாட்ஜில் காதலியுடன் தங்கிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    வேளாங்கண்ணி லாட்ஜில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைகுப்பம் கள்ளிடைமேடு பகுதியை சேர்ந்தவர் களியபெருமாள். இவருடைய மகன் சுதாகர் (வயது 30). இவர் சென்னையில் கொத்தனராக வேலை பார்த்து வந்தார்.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 11-ந் தேதி நாகை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு உள்ள ஒரு லாட்ஜில் அவர்கள் அறை எடுத்து தங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு 7.30 மணியளவில் சுதாகருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. இதனால் அறையில் இருந்து வெளியே சென்ற சுதாகர் செல்போனில் பேசிவிட்டு மீண்டும் தனது அறைக்கு வந்தார்.

    அப்போது அறையில் இருந்த அவரது காதலி செல்போனில் பேசியது யார்? என கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுதாகர் குளியல் அறைக்கு சென்றார். இதன்பின் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரது காதலி குளியல் அறை கதவை திறந்த போது குளியல் அறைக்குள் சுதாகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது காதலி சத்தம் போட்டார். இதைக்கேட்டு ஓடி வந்த விடுதி பணியாளர்கள் சுதாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சுதாகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது காதலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×